‘டைட்டன் நீர்மூழ்கி குறித்த படம் இயக்கும் எண்ணம் இல்லை’ என்று, ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் திடீரென்று மறுத்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழத்தில், டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளைப் பார்ப்பதற்காக, டைட்டன் என்று பெயரிடப்பட்ட ஆழ்கடல் நீர்மூழ்கி சுற்றுலா வாகனம், 5 நபர்களைக் கொண்ட குழுவை ஏற்றிக்கொண்டு சென்றது. அது புறப்பட்ட சில மணி நேரங்களில், அதன் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. தேடுதல் பணியின் இறுதியில், டைட்டன் நீர்மூழ்கி பேரழுத்தத்தின் காரணமாக உடைந்ததில், அதில் பயணம் செய்த 5 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த விபத்தை அடிப்படையாக வைத்து படம் ஒன்று உருவாகிறது என்றும், அதை ‘டைட்டானிக்’, ‘அவதார்’ ஆகிய படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் எழுதி இயக்குவதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பொதுவாக ஊடகங்களில் வரும் அவதூறான வதந்திகளுக்கு நான் பதில் சொல்வது இல்லை. ஆனால், இந்தச் செய்திக்கு கண்டிப்பாக நான் பதிலளித்தாக வேண்டும். நான் ஓசன்கேட் தொடர்பான படம் குறித்து எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. எப்போதும் ஈடுபடவும் மாட்டேன்’ என்று மறுத்துள்ளார்.