சென்னை: ஏ கியூப் மூவிஸ் ஆப் சார்பில் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடித்து தயாரித்து, ஜெய் சதீசன் நாகேஸ்வரன் என்ற நிஜப்பெயரில் இயக்கியிருந்த படம், ‘ஜெய் விஜயம்’. இப்படம் தியேட்டர்களிலும், ஏ கியூப் மூவிஸ் ஆப்பிலும் வெளியானது. இந்நிலையில், இனிமேல் நடிப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்த முடிவு செய்திருப்பதாக ஜெய் ஆகாஷ் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:
எனக்கு உலகம் முழுக்க மூன்று லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள். என் படத்துக்கு சரியான தியேட்டர்கள் கிடைக்காத நிலையில், எனது சொந்த ஆப் மூலம் படத்தை ரிலீஸ் செய்ததால் அதிகமான லாபம் கிடைத்துள்ளது. அடுத்து ‘அமைச்சர் ரிட்டர்ன்’, ‘மாமரம்’ ஆகிய படங்களில் நடிக்கிறேன். இதில் ‘அமைச்சர் ரிட்டர்ன்’ படத்தை நானே இயக்கி யுள்ளேன். தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டதால் டைரக்ஷன் செய்தேன். இதுதவிர, 4 வெளியார் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்திருக்கின்றன.
அவற்றை வெவ்வேறு டைரக்டர்கள் இயக்குகிறார்கள். இனிமேல் நான் படம் இயக்க மாட்டேன். நடிப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவேன். தமிழிலும், தெலுங்கிலும் நடிக்கிறேன். சில படங்கள் இந்தியிலும் டப்பிங் ஆகின்றன. ஜெய்சங்கரைப் போல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜெய் ஆகாஷின் படம் திரைக்கு வர வேண்டும் என்று பலர் சொல்கிறார்கள். அந்த ஆசை எனக்கும் இருப்பதால் தொடர்ந்து நடிப்பேன்.