சென்னை: லேகா தியேட்டர்ஸ் சார்பில் ராயல் பாபு தயாரித்துள்ள படம், ‘நினைவெல்லாம் நீயடா’. இதை ‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’, ‘அருவா சண்ட’ ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். பிரஜின், மனீஷா யாதவ், யுவலட்சுமி, சினாமிகா, ரோஹித், மனோபாலா, மதுமிதா, ஆர்.வி.உதயகுமார், ‘வழக்கு எண் 18/9’ முத்துராமன், பி.எல்.தேனப்பன், ரஞ்சன் குமார் நடித்துள்ளனர். ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசை அமைத்துள்ளார். இது அவரது இசையில் உருவாகும் 1,417வது படமாகும்.
இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் பேரரசு பேசுகையில், ‘இப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது, ‘பன்னீர் புஷ்பங்கள்’ படம் ஞாபகத்துக்கு வந்தது. நம்மை எல்லாம் பள்ளி காலக்கட்டத்துக்கு படம் அழைத்துச் சென்றுவிட்டது. இது இளையராஜாவின் 1,417வது படமாகும். இந்த சாதனையை இசைஞானி ஒருவரால்தான் செய்ய முடியும். நாம் சோகமாக இருக்கும்போது அவரது பாடல்களைக் கேட்டு ஆறுதல் அடைந்தோம். இதில் நடித்துள்ள யுவலட்சுமிக்கு நடிகை சுவலட்சுமியைப் போன்ற குடும்பப் பாங்கான சாயல் இருக்கிறது. வாழ்க்கையில் காதலித்து தோல்வி அடைந்தவர்கள், அப்படியே அந்த பசுமையான நினைவுகளுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர்களை மீண்டும் சந்திக்கவே கூடாது. 20 வருடங்களுக்குப் பிறகு காதலியைப் பார்க்கலாம் என்று நினைத்தால், அவரது தோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சி ஏற்படும். பிறகு பசுமையான நினைவுகள் எதுவும் மனதில் தோன்றாது’ என்றார்.