திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடியை பூர்வீகமாக கொண்டவர் பிரபல திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் நடிகை நயன்தாராவின் கணவர். விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுந்து. இவருடன் பிறந்தவர்கள் 9 பேர். இதில் விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம், தனது மனைவி பிரேமாவுடன் லால்குடியிலும், சித்தப்பா குஞ்சிதபாதம், மனைவி சரோஜாவுடன் கோவையிலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று லால்குடி காவல் நிலைய டிஎஸ்பி அலுவலகத்திற்கு குஞ்சிதபாதம், தனது அண்ணன் மாணிக்கத்துடன் வந்து புகார் மனு அளித்தார். அதில், எங்களுக்கு தெரியாமல் சிவக்கொழுந்து சொத்தை ஏமாற்றி விற்று விட்டார். அதில் பல வில்லங்கங்கள் உள்ளது.
ேமலும் எங்கள் பொது சொத்தை விற்ற கிரய பத்திரத்தில், மேற்படி நிலத்தில் பிற்காலத்தில் ஏதேனும் வில்லங்கம் ஏற்பட்டால், தன்னுடைய சொத்து அல்லது தன் வாரிசுகளின் சொத்துக்களின் மூலமாக வில்லங்கத்தை ஈடு செய்வதாக உறுதி கூறி, அந்த நிலத்தை விற்பனை செய்துள்ளார். எனவே மோசடியாக பொது சொத்தை விற்றது தொடர்பாக சிவக்கொழுந்துவின் வாரிசுகளான அவர் மனைவி மீனாகுமாரி, மகன் விக்னேஷ் சிவன், மருமகள் நயன்தாரா மற்றும் மகள் ஐஸ்வர்யா ஆகியோர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து, நிலத்தை வாங்கியவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை செலுத்தி நிலத்தை மீட்டு, முழுமையாக எங்களுக்கு கிடைக்க அவர்களுக்கு வலியுறுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்த டிஎஸ்பி அஜய் தங்கம் லால்குடி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.