சென்னை: தமிழக அரசிடம் தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்கம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: புதிய திரைப்படங்கள் வெளி வந்து 8 வாரம் கழித்து தான் ஓடிடியில் திரையிட வேண்டும். ஓடிடியில் புதிய திரைப்படங்கள் 4 வாரங்கள் கழித்த பிறகு தான் விளம்பரம் செய்ய வேண்டும். புதிய திரைப்படங்களுக்கு அதிபட்சமாக 60 சதவிகிதம் பங்குத் தொகையாக வேண்டும். திரையரங்குகளில் திரையிட தயாரிக்கப்பட்ட படங்களை ஓடிடியில் திரையிடும்போது அதில் வரும் வருமானத்தில் ஒரு பங்கு திரையரங்குகளுக்கு அளிக்க வேண்டும்.
திரையங்குகளுக்கு பராமரிப்பு கட்டணம் மற்ற மாநிலத்தில் உள்ளது போல வசூலிக்க அனுமதிக்க வேண்டும். திரையரங்குகள் வர்த்தக சம்பந்தமான நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். மின்சாரக் கட்டணங்கள், சொத்து வரி ஆகியவைகள் திரையரங்குகளுக்கு குறைத்து வசூலிக்க ஆவன செய்ய வேண்டும். ஏற்கனவே நாம் கொடுத்துள்ள கோரிக்கைகளை அரசு மறுபரிசீலனை செய்து விரைவில் அனுமதி அளித்து திரையரங்குகளை வாழ வழி செய்ய அரசை வேண்டுகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.