சென்னை: ‘தாமிரபரணி’, ‘பூஜை’ ஆகிய படங்களை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம், ‘ரத்னம்’. பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்க, ‘மைனா’ சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் 26ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து விஷால் அளித்த பேட்டி: மூன்றாவது முறையாக ஹரி இயக்கத்தில் நடிப்பதால், வித்தியாசமான கதை வேண்டும் என்று கேட்டேன். அதற்கேற்ப ஹரி வழக்கமான தனது பாணியில் இருந்து விலகி, குடும்ப சென்டிமெண்டுக்கு 40 சதவீதமும், ஆக்ஷனுக்கு 60 சதவீதமும் ஒதுக்கி படத்தை உருவாக்கியுள்ளார். கனல் கண்ணன் வடிவமைத்த ஒரு சண்டைக்காட்சி, 5 நிமிடங்களுக்கு மேல் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இதுபோல் இந்திய திரையுலகில் எந்தப் படத்திலும் பார்த்திருக்க முடியாது.
என் திருமணம் எப்போது என்று, என் பெற்றோர் கேட்டு வற்புறுத்துகின்றனர். என் நண்பன் ஆர்யாவுக்கு திருமணம் ஆனவுடன் என் திருமணம் நடக்கும் என்று முன்பு சொன்னேன். சாயிஷாவை திருமணம் செய்துகொண்ட ஆர்யா, ஒரு மகளுக்கும் அப்பா ஆகிவிட்டார். பிறகு நான், தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்த பிறகு திருமணம் செய்துகொள்வேன் என்று சொன்னேன். திருமணம் என்பது சாதாரண விஷயம் இல்லை. என் திருமணத்தை நான் தள்ளிப்போட்டுக் கொண்டே வருவதால், திருமணத்தின் மீது எனக்கு வெறுப்பு இருப்பதாக நினைக்க வேண்டாம். என் அம்மா இதுபற்றி கேட்டபோது, ‘இன்னும் பிரபாஸ், சல்மான்கான் போன்றோர் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவர்களுக்கு திருமணம் நடந்த பிறகு என் திருமணம் நடக்கும்’ என்று சொல்லிவிட்டேன். இந்த ஆண்டில் பொருளாளர் கார்த்தியின் தீவிர முயற்சியில் நடிகர் சங்க புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டால், கண்டிப்பாக இந்த ஆண்டு இறுதியில் என் திருமணம் நடக்கும். மணப்பெண் யார் என்று தெரியவில்ைல. கண்டிப்பாக அந்தப் பெண் எங்கோ பிறந்து எனக்காக காத்திருப்பாள் என்று நம்புகிறேன்.