சென்னை, ஜூன் 15: ஏஞ்சல் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.ஜே.சூர்யா வழங்க, ராதாமோகன் இயக்கியுள்ள படம் ‘பொம்மை’. எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், சாந்தினி தமிழரசன் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
நாளை திரைக்கு வரும் இப்படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா கூறியதாவது:
இப்படத்தில் இடம்பெறும் காதல் கதை மிகவும் வித்தியாசமாக இருக்கும். அந்தப் பெருமை இயக்குனர் ராதாமோகனையே சேரும். பொதுவாக நடிகைகளை பொம்மை மாதிரி இருக்கின்றனர் என்று புகழ்வார்கள். இப்படம் முழுக்க பிரியா பவானி சங்கர் பொம்மையாகவே நடித்துள்ளார். நிஜத்தில் அவரைப் பார்க்கும்போதும் பொம்மை மாதிரி அவ்வளவு அழகாக இருப்பார். படத்தில் அவர் என் கண்களுக்கு மட்டுமே தெரிவார். ‘மான்ஸ்டர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் நாங்கள் ஜோடி சேர்ந்துள்ளோம்.
‘பொம்மை’ படத்தையும் ரசிகர்கள் ஹிட்டாக்கினால், தொடர்ந்து நாங்கள் நிறைய படங்களில் ஜோடி சேர்ந்து நடிப்போம். மற்றபடி பிரியா பவானி சங்கர் என் வீட்டிலுள்ள ஒருவரைப் போன்ற சாயலில் இருக்கிறார். அதுவும் நான் அவரை ஹீரோயினாக தேர்வு செய்ய முக்கிய காரணமாகும். படத்தில் என்மீது காதல் கொள்பவராக சாந்தினி தமிழரசன் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. ரசிகர்கள் எனக்காக இப்படத்தை தியேட்டரில் பார்க்கிறீர்aகளோ இல்லையோ, அவரது பின்னணி இசைக்காக ஒருமுறை பார்க்கலாம்.