புதுடெல்லி: இந்த காலாண்டில் மட்டும் ரூ.333 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் 50 தியேட்டர்களை பிவிஆர் நிறுவனம் மூட உள்ளது. பிவிஆர் நிறுவனம் நாடு முழுவதும் உள்ள ஐநாக்ஸ் தியேட்டர்களுடன் இணைந்து கடந்த பிப்ரவரி முதல் செயல்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் சில படங்கள் நன்றாக ஓடினாலும் பல படங்கள் படுதோல்வியை சந்தித்தன. குறிப்பாக பாலிவுட் படங்கள் தோல்வியை கண்டன. இதற்கு ஓடிடியின் வளர்ச்சி முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பாலிவுட்டில் ‘பதான்’ படத்தை தவிர எந்த படமும் ஓடவில்லை. இந்நிலையில் கடந்த காலாண்டில் மட்டும் பிவிஆர்-ஐநாக்ஸ் தியேட்டர்கள் ரூ.333 கோடிக்கு நிகர இழப்பை சந்தித்துள்ளன. இதனால் நாடு முழுவதும் உள்ள ஆயிரம் தியேட்டர்களில் முதல் கட்டமாக மக்கள் அதிகம் வராத 50 தியேட்டர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
வரும் 6 மாத காலத்துக்குள் இந்த 50 தியேட்டர்களையும் மூட பிவிஆர்-ஐநாக்ஸ் குழுமம் முடிவு செய்திருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் மேலும் பல தியேட்டர்கள் மூடப்படலாம் என திரையுலகினர் கலக்கம் அடைந்துள்ளனர். சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களுக்கு மக்கள் வருவதில்லை என்றுதான் அந்த தியேட்டர்கள் மூடப்பட்டன. இதையடுத்துதான் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் அதிகரித்தன. இப்போது மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு கூட மக்கள் வர தயங்குகின்றனர். இதற்கு பாப்கார்ன் உள்ளிட்ட தின்பண்டங்களின் விலைகளும், பார்க்கிங் கட்டணமும் ஒரு காரணம். மேலும் புது படங்கள் தியேட்டர்களுக்கு வந்து 2 வாரத்திலேயே ஓடிடியில் வந்துவிடுகிறது. ஓடிடியின் பக்கம் மக்கள் கவனம் செலுத்துவதும் இதற்கு முக்கிய காரணமாகும்’ என தமிழ் சினிமாவை சேர்ந்த சிலர் தெரிவித்தனர்.