தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ரகுல் பிரீத் சிங், தற்போது பாலிவுட் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 10 வருடங்களுக்கு முன்பு பாலிவுட்டில் அறிமுகமான இவர் 10 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கடந்த ஆண்டு மட்டும் 5 படங்களில் நடித்தார். தற்போது அவர் நடித்து முடித்துள்ள ‘ஐ லவ் யூ’ படம் வருகிற 16ம் தேதி வெளிவருகிறது. த்ரில்லர் படமான இதில் 2 நிமிடம் தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும் காட்சிக்காக 14 மணி நேரம் நடித்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: ஸ்கூபா பயிற்சியாளர் ஜஹான் அடன்வாலா, தண்ணீருக்குள் மூச்சை அடக்குவதற்கு எனக்குப் பயிற்சியளித்தார்.
ஒரு மாதமாக தினமும் இதற்கானப் பயிற்சியை மேற்கொண்டேன். நீச்சல் வீரராக இருப்பதன் உடல் மற்றும் மனத் தேவைகளைப் பற்றிய ஆழமான புரிதலை, அவர் பயிற்சி கொடுத்தது. இந்தக் காட்சியை படமாக்குவதும் சவாலாக இருந்தது. நான் மதியம் 2 மணியில் இருந்து அதிகாலை 4 மணிவரை தண்ணீருக்குள்ளேயே இருந்தேன். கடும் குளிராக இருந்தது. ஒவ்வொரு ஷாட் முடிந்ததும் என் மீது வெதுவெதுப்பான நீரை ஊற்றுவார்கள். தண்ணீரில் உள்ள குளோரின் காரணமாக என் கண்கள் எரிந்தன. இருந்தாலும் அந்தச் சவாலை எதிர்கொண்டு நடித்தேன். என்று தெரிவித்துள்ளார்.