சென்னை : திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளத்தை சேர்ந்தவர் மணிமாறன் (37). தனது 16 வயது முதல் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். இவர் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் மரணமடைந்து விட்டால் அவர்கள் உடல்களை போலீசார் அனுமதியுடன் பெற்று அடக்கம் செய்து வருகிறார். கடந்த 21 ஆண்டுகளாக தொய்வின்றி இந்த பணியை அர்ப்பணிப்பு மனதுடன் செய்து வருகிறார். இதுவரை 2045 ஆதரவற்றோர் உடல்களை நல்லடக்கம் செய்துள்ளார்.
இவரது சேவையை பாராட்டி ஒன்றிய மாநில அரசுகள் விருதுகள் வழங்கியுள்ளன. பல மாநில முதல்வர்களின் பாராட்டுபெற்ற அவர் உலக சாதனையாளர் விருது கவுரவ டாக்டர் பட்டம் ஆகியவையும் பெற்றுள்ளார். இதுபற்றி அறிந்த நடிகர் ரஜினிகாந்த் மணிமாறனை நேரில் அழைத்து அவரது சேவையை பாராட்டியிருக்கிறார். மேலும் அவருக்கு ஆம்புலன்ஸ் ஒன்றையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.