கவுதம் கார்த்திக், சனா மக்பூல் நடிப்பில் திரைக்கு வந்த ‘ரங்கூன்’ என்ற படத்தை இயக்கியவர், ராஜ்குமார் பெரியசாமி. தற்போது அவர் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிக்கின்றனர். இப்படத்துக்கு தற்காலிகமாக ‘எஸ்கே21’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். இதில் ராணுவ வீரர் வேடத்தில் சிவகார்த்திகேயன்
நடிக்கிறார்.
இதற்காக அவர் தனது கெட்டப்பை மாற்றியுள்ளார். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் நடந்தது. 55 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டனர். ஆனால், ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் வரும் செப்டம்பர் மாதம் நடப்பதால், அதுகுறித்து பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், காஷ்மீர் உள்பட பல்வேறு பகுதிகளில் நடந்து வருகின்றன. இதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீரில் நடந்து வந்த படப்பிடிப்பு பாதுகாப்பு அதிகாரிகளால் நிறுத்தப்பட்டதாகவும், இதையடுத்து படக்குழு சென்னை திரும்பியதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி தனது சமூக வலைத்தளத்தில் கேமரா போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதையடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள், ‘எஸ்கே21’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளதாக கமென்ட் வெளியிட்டுள்ளனர்.