சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா, பாபி தியோல் நடித்துள்ள ‘அனிமல்’ என்ற படம், நாளை தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது. படம் குறித்து ரன்பீர் கபூர் கூறுகையில், ‘சென்னையிலும் எனது ஷூட்டிங்குகள் நடந்திருக்கின்றன. மும்பையைப் போலவே சென்னையையும் எனக்கு மிகவும் பிடிக்கும். இயக்குனருக்கும், எனக்கும் இடையே ஏற்பட்ட நல்ல புரிதல்தான் ‘அனிமல்’ படம் சிறப்பாக வருவதற்கு முக்கிய காரணமாகும். தாய் பாசம் குறித்து நிறைய படங்கள் வந்துள்ளன. தந்தை பாசம் பற்றி நிறைய படங்கள் வந்ததில்லை. அக்குறையைப் போக்குவதற்கு உருவான படம் ‘அனிமல்’ என்று சொல்லலாம். ஒருவன் தான் அதிகமான பாசம் வைத்திருப்பவர்களைக் காப்பாற்றுவதற்காக, எந்த எல்லைக்கும் செல்வான்.
ஆனால், அவனை அப்படி கொண்டு செல்லும் அந்தப்புள்ளி எது என்பதுதான் இப்படம். அனிமல் எப்போதும் தங்கள் உள்ளுணர்வுப்படி மட்டுமே செயல்படும். இக்கதையிலுள்ள ஹீரோவும் அப்படித்தான். படத்தைப் பார்க்கும்போது, இந்த டைட்டில் பொருத்தமானது என்பதை உணர்வீர்கள். இப்போது பான் இந்தியா படங்கள் வெளியாகி வெற்றிபெறுவதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கு ‘ஜவான்’ படம் ஓடுகிறது. இந்தியில் ‘ஜெயிலர்’, ‘விக்ரம்’ படங்கள் ஓடுகின்றன. நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற என் ஆசை விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன்’ என்றார்.