மும்பை: தமிழில் சுசீந்திரன் இயக்கத்தில் விக்ராந்த் நடித்த ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், மெஹ்ரின் பிர்சாடா. பிறகு கதைப்படி ஹீரோயின் சம்பந்தப்பட்ட காட்சிகள் தேவையில்லை என்று, இப்படத்தில் அவர் நடித்திருந்த அனைத்துக் காட்சிகளையும் சுசீந்திரன் நீக்கினார். எனினும், இப்படம் தோல்வி அடைந்தது. தொடர்ந்து விஜய் தேவராகொண்டாவின் ‘நோட்டா’, தனுஷின் ‘பட்டாஸ்’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கில் நடிக்க அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் அவர், ‘சுல்தான் ஆஃப் டெல்லி’ என்ற இந்தி வெப்தொடரில் நடித்துள்ளார். ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இத்தொடரில் மவுனி ராய், விநய் பதக் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இத்தொடரில் பாலியல் வன்கொடுமை காட்சி ஒன்றில் மெஹ்ரின் பிர்சாடா நடித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடுமையான விமர்சனங்கள், எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதையடுத்து மெஹ்ரின் பிர்சாடா தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ‘திருமண பந்தத்தில், கணவனால் நடத்தப்படும் பாலியல் வல்லுணர்வு காட்சியில் நடித்திருக்கிறேன். பல பெண்கள் சந்திக்கும் தீவிரமான பிரச்னை இது. ஆனால், அதை ‘பாலியல் காட்சி’ என்று ஊடகங்கள் விவரிப்பதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. அந்த வார்த்தை தீவிரமான ஒன்றை சாதாரண விஷயமாக மாற்றிவிடுகிறது. ஒரு நடிகையாக, அந்தக் கேரக்டருக்கு நியாயம் செய்வது என்னுடைய வேலை. எனவேதான் அந்தக் காட்சியில் நடித்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.