பெங்களூரு : நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மேலாளராக இருந்த கிரண் என்பவர் அவரிடம் ரூ80 லட்சம் மோசடி செய்துவிட்டதாகவும் இதனால் அவரை ராஷ்மிகா நீக்கிவிட்டதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் நடிகை ராஷ்மிகாவும் கிரணும் இணைந்து விளக்கம் அளித்துள்ளனர். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘எங்களுக்கு இடையே எந்த மோதலும் இல்லை. நாங்கள் சுமுகமாகவே பேசி பிரிந்துவிட்டோம். இனி இருவரும் சுதந்திரமாக வேலை செய்ய முடிவெடுத்துள்ளோம். நாங்கள் பிரிந்தது பற்றி வெளிவரும் வதந்திகளில் உண்மையில்லை’ என்று தெரிவித்துள்ளனர். ராஷ்மிகா இப்போது ரன்பீர் கபூருடன் நடித்துள்ள ‘அனிமல்’ படத்தை முடித்துவிட்டார்.
அடுத்து ‘புஷ்பா 2’ ‘ரெயின்போ’ படங்களில் நடித்து வருகிறார். இந்த சம்பவம் குறித்து ராஷ்மிகா மேலும் கூறுகையில் ‘எப்படியெல்லாம் வதந்திகள் கிளப்புகிறார்கள் என புரியவில்லை. அதிர்ச்சியாக இருந்தது. கன்னட சினிமாவில் நான் நுழைந்தபோது கிரண் எனக்கு மேனேஜராக இருந்தார். அவர் பண மோசடியில் ஈடுபடவில்லை. எங்களுக்குள் சில விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் சுமுகமாக பேசி பிரிந்துவிட்டோம். எப்போதோ நடந்த விஷயத்தை இப்போது வேறு மாதிரியாக சித்தரிப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை’ என்றார்.