மலையாளத்தில் கடந்த 2013ல் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், ‘திரிஷ்யம்’. இதையடுத்து தென்னிந்திய மொழிகளிலும், பாலிவுட்டிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு, அங்குள்ள முன்னணி நடிகர், நடிகைகள் நடித்தனர். இப்படங்கள் மிகப்பெரிய வெற்றிபெற்று, வசூலிலும் சாதனை படைத்தன. இந்தியாவை தொடர்ந்து சீனாவிலும் ‘திரிஷ்யம்’ படம் ரீமேக் செய்யப்பட்டது. பிறகு இப்படத்தின் 2ம் பாகம் வெளியாகி, முதல் பாகத்தைவிட அதிகளவில் வெற்றிபெற்றது. இந்நிலையில், தற்போது ‘திரிஷ்யம்’ படம் தென்கொரிய மொழியில் ரீமேக் செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இப்படத்தின் ரீமேக் என்பது, இந்தியில் வெளியான ‘திரிஷ்யம்’ படத்தின் ரீமேக்காக கொரிய மொழியில் உருவாக்கப்படுகிறது. இப்படத்தை இணைந்து தயாரிக்கும் பனோரமா ஸ்டுடியோஸ், ஆந்தாலஜி ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள், ‘திரிஷ்யம்’ படத்தை இந்திப் படம் என்றே குறிப்பிட்டுள்ளனர். அந்தவகையில் ஒரு இந்திப் படம் முதல்முறையாக கொரிய மொழியில் ரீமேக் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்று அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.