ஐதராபாத்: அஜித்தின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா சங்கர் படத்தில் சிரஞ்சீவி நடித்திருக்கிறார். சிரஞ்சீவி தொடர்ந்து ரீமேக் படங்களில் நடித்து வருகிறார். மோகன் லாலின் ‘லூசிஃபர்’ படத்தை தெலுங்கில் ‘காட் பாதர்’ என்ற பெயரில் ரீமேக் செய்தார். அதற்கு முன்னதாகவே விஜய்யின் ‘கத்தி’ படத்தை ‘கைதி 160’ என்ற பெயரில் ரீமேக் செய்தார். இதைத்தொடர்ந்து மலையாளத்தில் ஹிட்டான ‘ப்ரோ டாடி’ என்ற மோகன்லால் படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்ய இருக்கிறார் சிரஞ்சீவி. ‘போலா சங்கர்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சிரஞ்சீவி கூறியது:
ஏன் ரீமேக் படங்களிலே தொடர்ந்து நடித்து வருகிறீர்கள் என்று பலர் கேட்டு வருகின்றனர். என்னை பொறுத்தவரை கதை நன்றாக இருக்கும்போது தயாரிப்பாளர்கள், நடிகர்கள் அதை ரீமேக் செய்து நல்ல கதையை தெலுங்கு ரசிகர்களுக்கு கொடுப்பதில் என்ன தவறு? ஒடிடி வந்த பின் அனைத்து மொழி ரசிகர்களும் அனைத்து மொழிகளிலும் படங்களை பார்க்க முடிகிறது. மேலும் பல வகையான படங்களை ரீமேக் செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் கேட்கின்றனர். வேதாளம் திரைப்படம் எந்த ஒரு ஒடிடி தளத்திலும் இல்லை. அதுதான் எனக்கு நம்பிக்கையை தந்தது. இந்த காரணத்தினால் அதன் ரீமேக்கில் நடிக்க ஒப்புக் கொண்டேன். அது நல்ல பொழுதுபோக்கை ரசிகர்களுக்கு வழங்கும் என நம்புகின்றேன். இவ்வாறு சிரஞ்சீவி கூறினார்.