மும்பை: மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமலாகும் போது மகளிரின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று நடிகை லாரா தத்தா கூறினார். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில், மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்தது. அந்த மசோதாவிற்கு மக்களவை, மாநிலங்களவையில் பெரும்பாலான எதிர்கட்சிகள் ஆதரவளித்தன. அதனால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் எளிதாக நிறைவேறியது. ஆனால் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வருவதற்கு 10 ஆண்டுகள் கூட ஆகலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு காரணம், அனைத்து மாநிலங்களின் தொகுதி வரையறை, மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றை முடித்துக் கொண்டு தான் செயல்படுத்த முடியும் என்று ஒன்றிய அரசின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து பாலிவுட் நடிகை லாரா தத்தா கூறுகையில், ‘மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வந்ததை வரவேற்கிறேன். நாடாளுமன்றத்தில் அந்த மசோதா கொண்டு வந்த போது, அங்கு நடந்த முழு செயல்பாடுகளையும் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். மகளிர் இடஒதுக்கீடு மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியதால், மகளிருக்கான எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று நினைக்கிறேன்’ என்றார்.