கன்னட திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஏ. ஸ்ரீனிவாஸ் என்பவரின் மகன் 24 வயதான நடிகர் சூரஜ் குமார். இவர் திரையுலகிற்காக தன் பெயரை துருவன் என்று மாற்றிக் கொண்டார். இயக்குநர் அனூப் ஆண்டனி இயக்கத்தில் ‘பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா’ என்றப் படத்தில் சூரஜ் குமார் நடித்திருந்தார். ஆனால் இந்தப் படம் சில காரணங்களால் வெளியிடப்படவில்லை.
தற்போது ‘ரதம் ’ என்றப் புதிய படம் ஒன்றில் சூரஜ் குமார் நடித்து வருகிறார். மேலும், நடிகர் சூரஜ் குமார் பெயரிடப்படாத புதியப் படம் ஒன்றிலும் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்வுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் இவர் கடந்த சனிக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் மைசூரிலிருந்து ஊட்டிக்கு சென்றுள்ளார். அப்போது மைசூரு-குண்ட்லுபேட் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த வேளையில் டிராக்டரை முந்தி செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து அவரது இருசக்கர வாகனம் எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சூரஜ் குமார் உடனடியாக மைசூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சூரஜ்குமாரின் உயிரை காப்பாற்றும் பொருட்டு, பலத்த சேதமடைந்த அவரது வலது காலின் முழங்காலுக்கு கீழே இருந்த பகுதியை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.