சென்னை: ரோப் கேமரா அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் நடிகர் சூர்யா படுகாயம் அடைந்தார். சூர்யா நடிக்கும் படம் ‘கங்குவா’. இதை சிறுத்தை சிவா இயக்குகிறார். திஷா பதானி, யோகி பாபு, சமுத்திரக்கனி, சுனில் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படம் சமூக, சரித்திர பின்னணியில் உருவாகியுள்ள கதையம்சம் கொண்டது. பூந்தமல்லி ஈவிபி பிலிம் சிட்டியில் செட் அமைத்து இப்படத்தின் காட்சிகளை நேற்று முன்தினம் நள்ளிரவு படமாக்கி வந்தனர். அப்போது சூர்யா மற்றும் ஸ்டன்ட் கலைஞர்கள் சிலர் நடித்துக்கொண்டிருந்தனர். 10 அடிக்கு மேல் ராட்சத கேமரா ஒன்று ரோப்பில் கட்டி காட்சிகளை படமாக்கி வந்தனர்.
அப்போது திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் ரோப் அறுந்து கேமரா கீழே விழுந்தது. இதில் சூர்யாவுக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் வலியால் துடித்துக்கொண்டிருந்தார். உடனே அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதையடுத்து உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று நடைபெற இருந்த படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டது. வீட்டில் சூர்யா ஓய்வு எடுத்து வருகிறார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். இந்நிலையில் நசரத்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு நேற்று சென்று விசாரணை நடத்தினர்.