சென்னை: ‘துணிவு’ படத்தை அடுத்து அஜித் நடிக்கும் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. இம்மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதில் திரிஷா, ஹூமா குரேஷி என இரண்டு நாயகிகள் நடிக்க இருக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
இதில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில், துபாயில் சஞ்சய் தத்தும், அஜித்தும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால், இப்படத்தில் அவர் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. விஜய்யின் ‘லியோ’ படத்திலும் சஞ்சய் தத் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.