கர்நாடகத்தைச் சேர்ந்த அப்துல் கரீம் தெல்கி ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர். வறுமையைப் போக்க ரயில்களில் பழங்கள் விற்றவர். பிறகு சவுதி அரேபியா சென்ற அவர், அதிக பணம் சம்பாதித்த பிறகு நாட்டுக்கு திரும்புகிறார். பிறகு அவர், இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்துகிறார். இதற்காக போலியான சில ஆவணங்களைத் தயாரிக்கிறார். போலி ஆவணங்களை அச்சடிப்பது போல், இந்திய அரசின் முத்திரைத்தாள்களை போலியாக அச்சிடத் தொடங்கிய அவர், அதையே இந்தியா முழுக்க விரிவுபடுத்தி 3 லட்சம் கோடி ரூபாய் சம்பாதித்தார். நிதித்துறை மற்றும் பத்திரப்பதிவுத் துறையை ஆட்டம் காண வைத்தார்.
மாபெரும் இந்த மோசடிக்குப் பின்னால் அரசு உயரதிகாரிகள், அரசியல்வாதிகள், வங்கி அதிகாரிகள் உள்பட ஒரு மிகப்பெரிய கும்பல் செயல்பட்டிருந்தது. தெல்கி எப்படி சட்டத்தின் பிடியில் சிக்கினார்? போலி பத்திரப்பதிவு ஊழல் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன என்பதை தெல்கியின் வாழ்க்கைக் கதையுடன் சொல்லும் தொடர் இது. தெல்கியாக ககன் தேவ் யதார்த்தமாக நடித்துள்ளார். நிஜ தெல்கியை கண்முன் நிறுத்தியுள்ளார். தெல்கியின் வாழ்க்கைக் கதையை ஒரு பத்திரிகையாளர் எழுதியுள்ளார். அந்த அடிப்படையில் இத்தொடர் தயாராகியுள்ளது. எல்லாவற்றையும் நேரில் பார்ப்பதைப் போல் இயக்கியுள்ளார், துஷார் ஹிரனண்டனி. 5 எபிசோடுகளுடன் சோனி லிவ்வில் வெளியாகியுள்ளது. இதை பைனான்சியல் திரில்லர் பயோகிராபி என்று குறிப்பிடுகின்றனர். தமிழிலும் பார்க்கலாம்.