சென்னை: குன்றம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அருண் கே.பிரசாத் எழுதி இயக்கியுள்ள படம், ‘அக்கரன்’. இதில் கதையின் நாயக னாக எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ளார். மற்றும் ‘கபாலி’ விஷ்வந்த், வெண்பா, ஆகாஷ் பிரேம்குமார், நமோ நாராயணன், பிரியதர்ஷினி அருணாசலம், அன்னராஜ் கார்த்திகேயன், கார்த்திக் சந்திரசேகர், கண்ணன், மஹிமா நடித்துள்ளனர். எம்.ஏ.ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய, ஹரி இசை அமைத்துள்ளார். ஆர்விகே இணை தயாரிப்பு செய்துள்ளார். படம் குறித்து எம்.எஸ்.பாஸ்கர் கூறியதாவது:
தயாரிப்பாளர் கார்த்திகேயனுக்கு வாழ்த்துகள். ஹரி இசையில் பாடல் களும், சரவெடி சரவணனின் ஆக்ஷன் காட்சிகளும் சிறப்பாக இருக்கின்றன. இப்படத்தின் கதையைக் கேட்டபோது, ‘இது பயங்கர வில்லங்கமாக இருக்கிறதே. வேறு கதையை தயார் செய்யலாம் அல்லது இதில் வேறு ஹீரோ நடிக்கலாம்’ என்று சொன்னேன். ஆனால், படத்தில் அந்தக் கேரக்டருக்கான வயது மற்றும் நடிப்புக்கு நான்தான் சரியாக இருப்பேன் என்று சொல்லி சம்மதிக்க வைத்தனர். மகள்கள் என்றாலே நான் உருகிவிடுவேன்.
வெண்பாவும், பிரியதர்ஷினியும் எனது மகள்களாக அருமையாக நடித்துள்ளனர். மண்புழு கூட யாராவது மிதித்தால் திரும்பி கடிக்க வரும். அதுபோல், கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு முதியவரின் கதை இது. ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று என்னிடம் யாராவது கேட்டால் உடனே பயந்து விடுவேன். ஆனால், இதில் நான் முதன்மை கேரக்டரில் நடித்துள்ளேன். ரசிகர்கள் என்ன சொல்வார்களோ என்று எனக்கு பயமாக இருக்கிறது.