சென்னை: துரை கே.முருகன் இயக்கத்தில் ஜேம்ஸ் கார்த்திக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஹீரோவாக நடிக்கும் படம், ‘சீரன்’. நெட்கோ ஸ்டுடியோஸ் சார்பில் அவரே தயாரிக்கிறார். இனியா, ஆடுகளம் நரேன், சோனியா அகர்வால், அருந்ததி நாயர், ஆஜித், சென்ராயன், கிரிஷா குருப், ஆரியன், வெங்கடேஷ், மூர்த்தி நடிக்கின்றனர். பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப் பதிவு செய்கிறார். அரவிந்த் ஜெரால்ட், சசிதரன் இசை அமைக்கின்றனர். சினேகன், கு.கார்த்திக் பாடல்கள் எழுதுகின்றனர்.
எம்.நியாஸ் இணை தயாரிப்பு செய்கிறார். படம் குறித்து ஜேம்ஸ் கார்த்திக் கூறுகையில், ‘செய்யாறு பகுதியில் கடந்த 1980களில் என் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி கதை எழுதினேன். எனது தந்தை உயர்சாதி. தாயார் வேறு சாதி. அவர்களுடைய மகனான நான், தந்தைக்குப் பிறகு என் தாயின் சாதியைக் குறிப்பிட்டு சான்றிதழ் பெற்றேன். ஒரு பிரிவினரால் நிராகரிக்கப்பட்டு சிங்கப்பூர் சென்று முன்னேறிய நான், மீண்டும் ஊருக்கு வந்தபோது சந்திக்கும் பிரச்னைகளை எப்படி எதிர்கொள்கிறேன் என்பது கதை. எங்கள் குலதெய்வம் கருப்பசாமி. கிளைமாக்சில் வரும் ஆக்ரோஷமான பாடல், ரிஷப் ஷெட்டி நடித்த ‘காந்தாரா’ கிளைமாக்சை ஞாபகப்படுத்தும். தந்தை, மகன், கருப்பசாமி ஆகிய 3 கெட்டப்புகளில் நான் நடிக்கிறேன். இனியா 2 வேடங்களில் நடிக்கிறார்’ என்றார்.