திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தனுஷ் தனது குடும்பத் தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தனுஷ் நேற்று முன்தினம் இரவு திருப்பதிக்கு தனது மகன்கள், பெற்றோருடன் வந்தார். நேற்று காலை விஐபி தரிசனத்தில் தரிசனம் செய்தார். முன்னதாக அவர் தலைமுடி காணிக்கை செலுத்தினார். சுவாமியை தரிசனம் செய்த அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி, வேத பண்டிதர்கள் மூலம் ஆசிர்வாதம் செய்து வைத்தனர். பிறகு கோயிலுக்கு வெளியே தனுஷ் வந்தார்.
அவர் வந்த தகவல் அறிந்த அவரது ரசிகர்கள் அங்கு திரண்டனர். அவருடன் செல்பி எடுக்க அதிக ஆர்வம் காட்டினர். இதனால் அங்கு லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போட்டோ எடுக்க வந்த ஒரு கேமராமேன் தவறி கீழே விழுந்தார். இதைக்கண்ட தனுஷ் மற்றும் உடன்இருந்தவர்கள் அவரை தூக்கிவிட்டனர். இதையடுத்து சிறிது நேரத்தில் அங்கிருந்து தனுஷ் காரில் புறப்பட்டு சென்றார்.