பெங்களூரு: ‘அவள் ஒரு தொடர் கதை’ படத்தில் நடித்த பழம்பெரும் நடிகை லீலாவதி, உடல்நலக் குறைவால் இறந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு அடுத்த சோழதேவனஹள்ளியில் பழம்பெரும் கன்னட நடிகை லீலாவதி (86) வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக நோய்வாய்பட்டு இருந்த அவர், கடந்த சில நாட்களாக படுத்த படுக்கையாக இருந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் பிறந்த லீலாவதி, கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் ‘பட்டினத்தார்’, ‘சுமைதாங்கி’, ‘வளர்பிறை’, ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘நான் அவன் இல்லை’, ‘அவர்கள்’, ‘புதிர்’, ‘கர்ஜனை’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை லீலாவதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ‘நடிகை லீலாவதியின் மறைவுச் செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். சினிமாவின் உண்மையான அடையாளமான அவர், பல படங்களில் தனது நடிப்பால் அலங்கரித்தார். அவரது மாறுபட்ட கதாபாத்திரங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க திறமை எப்போதும் நினைவில் பாராட்டப்படும். எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும், ரசிகர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி’ என்று தெரிவித்துள்ளார்.