சென்னை: இடாகி என்டர்டெயின்மென்ட் சார்பில் சித்தார்த் தயாரித்து நடித்துள்ள படம், ‘சித்தா’. மலையாள நடிகைகள் நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசை அமைத்துள்ளார். ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ஆகிய படங்களை தொடர்ந்து எஸ்.யு.அருண்குமார் எழுதி இயக்கியுள்ள இப்படம், வரும் 28ம் தேதி திரைக்கு வருகிறது. தமிழகம் முழுவதும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ள இப்படத்துக்கு 4 மொழிகளிலும் சித்தார்த் டப்பிங் பேசியுள்ளார். படம் குறித்து அவர் கூறியதாவது:
சித்தப்பா என்பதன் சுருக்கம்தான் ‘சித்தா’. எனக்கும், எனது அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்பு மற்றும் உணர்வுகள்தான் கதை. மதுரை அருகிலுள்ள கிராமத்துப் பின்னணியில் கதை நடக்கிறது. நான் சினிமாவுக்கு வந்து 20 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. படம் தயாரித்தால் இப்படியொரு கதையுடன் தயாரித்து நடிக்க வேண்டும் என்று அப்போது நினைத்ததை இப்போதுதான் என்னால் நிறைவேற்ற முடிந்தது. இதை தயாரித்து நடித்ததற்காக பெருமைப்படுகிறேன். இனி இதுபோல் ஒரு படத்தை தயாரிக்க முடியுமா என்று தெரியவில்லை. ‘சித்தா’ படத்தில் நடக்கும் சம்பவங்களை ஒரு சினிமா படம் என்று சொல்ல முடியாது. படம் பார்க்கும் ஒவ்வொரும் தங்கள் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திக் கொள்வது போல் கதையும், காட்சிகளும் யதார்த்தமாக இருக்கும். திடீரென்று ஒரு சிறுமி காணாமல் போகிறாள். இச்சம்பவத்தால் ஒரு குடும்பம் எப்படி சிதறுகிறது என்ற கோணத்தில் கதை நகரும். அன்றாடம் சமூகத்தில் நடக்கும் பல்வேறு சம்பவங்களின் தூண்டுதலாகவே இப்படத்தின் கதையை அருண்குமார் எழுதியுள்ளார். இது ஒரு சர்வதேச படம். ரிலீசுக்குப் பிறகு பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தும். இதுவரை பார்க்காத சித்தார்த்தைப் பார்க்கலாம். நிமிஷா சஜயன் நடிப்பில் மிரட்டி இருக்கிறார். மற்றும் இதுவரை சினிமா கேமராவையே பார்க்காதவர்கள் இயல்பாக நடித்து அசத்தியுள்ளனர்.