நடிப்பு, திரைப்பட தயாரிப்பு போன்ற விஷயங்களை தாண்டி, அன்றாட சமூக நிகழ்வுகள் பற்றிய தனது கருத்துகளை துணிச்சலுடன் சொல்லி வருபவர், சித்தார்த். இதனால் அவருக்கு மிரட்டல்களும், எதிர்ப்புகளும் வந்திருக்கின்றன என்றாலும், தைரியத்துடன் தனது தரப்பு நியாயங்களைப் பேசி வருகிறார். உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை பெசன்ட் நகரிலுள்ள தனியார் பள்ளி வளாகத்தில் 3 கி.மீ நடைபயணத்தை சித்தார்த் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சித்தார்த்திடம் நிருபர்கள், இந்தியாவுக்கு பாரத் என்று பெயர் மாற்றப்படுவது குறித்து கேட்டபோது பதிலளித்த அவர், ‘தற்கொலை தடுப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது. இது மிகவும் முக்கியமான ஒன்று. மக்களுக்கு பல்வேறு பிரச்னைகள் இருப்பதால்தான் தற்கொலை எண்ணங்கள் ஏற்படுகின்றன. அதற்கான விழிப்புணர்வு பேரணி இது. இந்தியாவில் சென்னையில் நாம் கூடியிருக்கிறோம். எனவே, எந்தப் பெயரை யார் வைத்தனர் என்பது தேவையில்லாத ஆணி’ என்று காட்டமாகப் பதிலளித்தார்.