சென்னை: கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். இதில் ஹீரோயினாக சாய் பல்லவி நடிக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி எழுதி, இயக்குகிறார். இவர் கவுதம் கார்த்திக் நடித்த ரங்கூன் படத்தை இயக்கியவர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், கலை இயக்குனர் ராஜீவன், ஒளிப்பதிவாளர் சி.ஹெச்.சாய், ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டெஃபன் ரிக்டர் ஆகியோர் இப்படத்தில் பணியாற்றுகின்றனர். மேலும் இப்படத்தை காட் ப்ளஸ் என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரிக்கிறது.
‘பல்வேறு கலாச்சாரங்களுக்கு மத்தியில் நம் தேசத்தின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றைப் பேசும் படமாக இது இருக்கும். அதிரடி ஆக்ஷன்களுடன் புதுமையான கதைக் களத்தில் பயணிக்கும். சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு நிறைவான அனுபவமாக இருக்கும்’ என்றார் ராஜ்குமார் பெரியசாமி. இந்த படத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். படப்பிடிப்பு காஷ்மீரில் அடுத்த 60 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும்.