சென்னை: சிவகார்த்திகேயனின், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நல்ல கதையம்சம் சார்ந்த படங்களை தேர்ந்தெடுத்து தயாரித்து வருகிறது. இப்போது இயக்குநர் கமலக்கண்ணனின் ‘குரங்கு பெடல்’ படத்தை வெளியிடுகிறது. சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள மயக்கும் காவிரி ஆற்றின் அழகிய கரையோரங்களில் 1980 களின் கோடைகாலத்திற்கு பார்வையாளர்களை படம் கொண்டு செல்கிறது.
மனதை கவரும் இந்த கதை, சைக்கிள் ஓட்டும் கலையில் தேர்ச்சி பெறத் துடிக்கும் மகனான மாரியப்பனுக்கும் அவனது தந்தைக்கும் இடையே உள்ள பிணைப்பை வெளிக்கொண்டு வருகிறது. ராசி அழகப்பன் எழுதிய ’சைக்கிள்’ சிறுகதையை தழுவி உருவாகியுள்ளது. இயக்குநர் கமலக்கண்ணன் இதற்கு முன்பு ‘மதுபானக்கடை’, ’வட்டம்’ போன்ற படங்கள் மூலம் பல விருதுகளை பெற்றிருக்கிறார்.
ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீ பாஸ்கரன் ஒளிப்பதிவு. காளி வெங்கட், நக்கலைட்ஸ் பிரசன்னா பாலச்சந்தர், ஜென்சன் திவாகர், சந்தோஷ் வேலுமுருகன், வி.ஆர். ராகவன், எம். ஞானசேகர், ரத்தீஷ் மற்றும் சாய் கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தயாரிப்பு சிவகார்த்திகேயன், சவிதா சண்முகம், சுமீ பாஸ்கரன். இணை தயாரிப்பு சஞ்சய் ஜெயக்குமார் கலை அரசு.