பான் இந்தியா நடிகையாக மாறியுள்ள காஜல் அகர்வால், தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2020ல் தனது நீண்ட நாள் காதலரும், மும்பை தொழிலதிபருமான கவுதம் கிட்ச்லுவை காதலித்து திருமணம் செய்த அவர், மும்பையிலுள்ள சொந்த வீட்டில் குடியேறினார். அவர்களுக்கு நீல் என்ற மகன் இருக்கிறான். இந்நிலையில் காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டியில், ‘நான் கர்ப்பமாக இருந்தபோது, குண்டாகி விட்டேன் என்று என்னை கிண்டல் செய்தனர். பிறகு என் மகன் நீல் பிறந்த சில மாதங்களிலேயே மீண்டும் படப்பிடிப்புக்கு சென்றேன்.
அப்போதும் சிலர், ‘குழந்தையை விட்டுவிட்டு இப்படி நடிக்கச் செல்லலாமா?’ என்று கேலியும், விமர்சனமும் செய்தனர். ஆனால், யார் என்ன நினைத்தாலும், என் மகனுக்குத்தான் முதல் முக்கியத்துவம் தருகிறேன். முதல்முறையாக அவனை என் மார்புடன் இறுக அணைத்தபோது, அவனை மிகச்சிறப்பாக வளர்க்க முடியுமா என்று பயந்தேன். ஆனால், இப்போது எல்லா விஷயங்களையும் மெதுவாக கற்றுக்கொண்டு, எனது செயல்களை சரிப்படுத்தி வருகிறேன்.
தினந்தோறும் காலையில் என் மகனை விட்டுவிட்டு படப்பிடிப்புக்குச் செல்லும்போது, என் மனம் வேதனையுடன் துடிக்கிறது. அதற்காக அவனை அலட்சியம் செய்கிறேன் என்று அர்த்தம் இல்லை. நீலுக்காக நேரத்தை ஒதுக்கிக்கொள்வதும், அவனுக்கு அன்பைப் பகிர்வதும், அவன் சார்பான பல்வேறு விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, எனது பணியையும் பங்கம் வராமல் பார்த்துக்கொள்கிறேன். என் மகனுக்கு முன்னால் நான் ஒரு பலமான தாயாக நிற்க ஆசைப்படுகிறேன்’ என்றார்.