சென்னை: இசை அமைப்பாளர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா 2000மாவது ஆண்டில் பாண்டியராஜன் இயக்கிய ‘டபுள்ஸ்’ படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். அதன்பிறகு குத்து, எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, ஜித்தன், சிவகாசி, சாணக்யா, தலைமகன், ஆள்வார், பழனி, வைத்தீஸ்வரன், நேபாளி, பாண்டி, துள்ளி விளையாடு, பூலோகம், ஆதார், தெற்கத்தி வீரன் உள்பட ஏராளமான படங்களுக்கு இசை அமைத்துள்ளார். அவர் இசை அமைக்கும் 100வது படம் ‘பிரியமுடன் ப்ரியா’. கோல்டன் மூவீஸ் சார்பில் சுஜித், பானு தயாரிக்கும் இந்த படத்தை ஏ.ஜே.சுஜித் இயக்கி உள்ளார். முருகா அசோக் நாயகனாகவும், லீசா நாயகியாகவும் நடித்துள்ளனர். ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் 100 படங்களுக்கு இசை அமைத்த ஸ்ரீகாந்த் தேவாவிற்கு பாராட்டு விழாவும் நடந்தது. இதில் இசை அமைப்பாளர்கள் தேவா, கங்கை அமரன், இயக்குனர்கள் பேரரசு, ஆர்.வி.உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் ஸ்ரீகாந்த் தேவா பேசியதாவது: ஆரம்பத்தில் எனக்கு இசை பற்றி எதுவும் தெரியாது, அப்பா, சித்தப்பாக்கள் இசை கருவிகள் வாசிப்பதை கேட்டுக் கொண்டிருப்பேன். படிப்பும் ஏறவில்லை. ஒரு நாள் அப்பா நீ என்னவாக போகிறாய் என்று கேட்டார். கீ போர்ட் பிளேயராகிறேன். எனக்கு நல்ல கீ போர்ட் வாங்கி தாருங்கள். உங்கள் பெயரை காப்பாற்றுவேன் என்று சொன்னேன். நல்ல கீ போர்ட் வாங்கித் தந்தார். நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தேனா என்று தெரியவில்லை.