பெங்களூரு: நடிகர் சுதீப், கன்னடத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். மற்ற மொழிகளிலும் நடித்து பான் இந்தியா நடிகராக மாறியுள்ளார். இந்நிலையில், 3ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி சாக்ஷி, ஆஸ்டியோசர்கோமா என்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் இருக்கும் ஸ்ரீசங்கரா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சிகிச்சை பெற்று வரும் அவர், சுதீப்பின் தீவிர ரசிகை.
அவரிடம், ‘ஏன் சுதீப்பை சந்திக்க ஆசை?’ என்று கேட்டபோது, ‘அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்ற சிறுமி, ‘கன்னடத்தில் வெளியான ‘ராணா’ படத்தில் இடம்பெறும் திதிலி பாடல் என்னை எப்போதும் உற்சாகப்படுத்தும். அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்பது என் கனவு’ என்றார். சிறுமியின் தந்தை மஹிந்தர், தச்சராகப் பணியாற்றுகிறார். தாய், சுரேகா ராணி. ஏழ்மை நிலையில் இருக்கும் சிறுமியின் விருப்பத்தை அறிந்த சுதீப், உடனே அவரை நேரில் சந்தித்துப் பேசினார். தனது கனவு ஹீரோவை நேரில் சந்தித்த பிறகு சாக்ஷி உற்சாகத்துடன் இருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.