பெங்களூர்: ஆஸ்கர் விருது வாங்கியும் அதனால் அவதிப்படுவதாக சோகத்துடன் கூறுகிறார் தயாரிப்பாளர் குனித் மோங்கா. உதகையில் குட்டி யானையை பராமரித்து வளர்த்த தமிழ் தம்பதி பற்றிய ஆவணப் படம்தான் தி எலிபென்ட் விஸ்பரர்ஸ். இந்த ஆவண படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இதன் மூலம் இந்த ஆவணப் படம் பிரபலமானது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இது வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஆஸ்கர் விருது வாங்கியதே ஒரு சோதனையாகிவிட்டது என்கிறார் இந்த படத்தின் தயாரிப்பாளர் குனித் மோங்கா. அவர் கூறியது: ஆஸ்கர் விருது வென்ற பிறகு நாடு முழுவதும் பல்வேறு விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு வருகிறது. அங்கெல்லாம் செல்லும்போது ஆஸ்கர் விருதையும் கூடவே ஒரு பையில் வைத்து எடுத்து செல்கிறேன். விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், பையில் என்ன இருக்கிறது என கேட்கிறார்கள்.
ஆஸ்கர் விருது இருப்பதாக சொன்னதும், என்னது ஆஸ்கர் விருதா என பையில் கையை விட்டு எடுத்து ஆச்சரியமாக பார்க்கிறார்கள். அத்துடன் விடுவதில்லை. ஒவ்வொருவராக அதனுடன் செல்பி எடுத்துக் கொள்கிறார்கள். நிகழ்ச்சிகளுக்கு செல்லும் இடத்திலும் அதை என்னிடமிருந்து வாங்கி, தங்களது கையில் வைத்து புகைப்படம் எடுப்பதிலேயே பலரும் குறியாக இருக்கிறார்கள். இவர்கள்தான் இப்படி செய்கிறார்கள் என்றால், எனது குடும்ப உறுப்பினர்கள் கூட, என்னை கண்டுகொள்ளாமல், ஆஸ்கரை எடுத்துதான் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். அதனுடன்தான் போட்டோ எடுக்கிறார்கள். அந்த ஆஸ்கர் படத்தை தயாரித்த எனக்கு எந்த மதிப்புமே இல்லை. இவ்வாறு குனித் மோங்கா தனது சோகக் கதையை சொன்னார்.