சென்னை: சென்னை அண்ணாசாலையில் புகழ்பெற்ற ஹஸ்ரத் சையத் மூசா காதிரி எனும் தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவில் மத வேறுபாடுகள் இன்றி பொதுமக்கள் வருவது வழக்கம். 450 ஆண்டுகளுக்கு முன்பு ஹஸ்ரத் சையத் மூசா ஷா காத்ரி பாக்தாதி, பாக்தாத் ஷரீப்பில் இருந்து வந்து தற்போது அண்ணா சாலையில் எல்ஐசிக்கு எதிரே உள்ள தர்கா இருக்கும் இடத்தில் வாழ்ந்தார். பின்னர், அவர் இறந்தவுடன் வீட்டிற்கு பக்கத்திலேயே அடக்கம் செய்யப்பட்டர்.
இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு கந்தூரி மற்றும் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சென்னை அண்ணாசாலையில் உள்ள தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு விழாவில் பங்கேற்க இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று முன்தினம் இரவு வந்தார். அங்கு ஆடி காரில் வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தார். பின்னர், கூட்டம் அதிகரித்ததால் அங்கிருந்து ஆட்டோவில் புறப்பட்டு சென்றார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.