ஐதராபாத்: பிரபல தெலுங்கு இயக்குனர் சந்து மொண்டேடி, ‘கார்த்திகேயா’, ‘கார்த்திகேயா 2’ படங்களை இயக்கியவர். ஃபேன்டஸி கதை படங்களான இவை இரண்டும் மெகா வெற்றிய பெற்றது. தனது சமீபத்திய பேட்டியில் சூர்யாவை வைத்து ஒரு மெகா படத்தைத் திட்டமிட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறும்போது, ‘சூர்யா சார் மிகவும் உற்சாகமாகவும் நட்பாகவும் இருப்பதால் அவருடன் பேசுவது எப்போதுமே அருமையாக இருக்கும். எனது படம் ‘கார்த்திகேயா 2’ பற்றி சூர்யா பேசும்போது படத்தின் பல்வேறு காட்சிகளை தெளிவாக நினைவில் வைத்துள்ளார். அவருடனான ஒவ்வொரு சந்திப்பும் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது.
நான் அவரை (சூர்யா) வைத்து ரிக்வேதம், யஜுர்வேதம், சாமவேதம் மற்றும் அதர்வவேதம் ஆகிய நான்கு வேதங்களைப் பற்றிய ஒரு படத்தைத் திட்டமிடுகிறேன். அது ஒரு சமூக-கற்பனை வகை திரைப்படமாக இருக்கும். இருவரும் அதைப் பற்றி பேசும்போது மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். இன்னும் ஒன்றரை அல்லது இரண்டு வருடங்கள் அவர் பிஸியாக இருப்பார். அதன் பிறகுதான் இந்த படம் தொடங்கும். ஆனால், ஸ்கிரிப்ட்டின் முன்னேற்றத்தைப் பற்றி சரிபார்க்க அவர் என்னை அவ்வப்போது அழைக்கிறார். இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது’ என்றார்.