சென்னை: சேத்தன் சீனு, நயன்தாரா சக்ரவர்த்தி, சுதா ராணி, பிரியா லால், சுமன், ஸ்ரீரஞ்சனி, சித்தாரா, சத்யப்பிரியா, காளி வெங்கட், முனீஸ் ராஜா, படவா கோபி, பிரேம்குமார் நடிக்கும் படம், ‘ஜென்டில்மேன் 2’. அஜயன் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார். இப்படத்தின் தொடக்க விழாவையும், ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக ஆஸ்கர் விருது பெற்ற இசை அமைப்பாளர் எம்.எம்.கீரவாணிக்கு பாராட்டு விழாவையும் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் சென்னையில் நடத்தினார். இவ்விழாவில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், ஜப்பான் துணை தூதர் தாகா மஸாயூகி, வங்கதேச குடியரசு துணை உயர் கமிஷனர்
எம்.டி.அரிபுர் ரஹ்மான் மற்றும் ஆர்.பி.சவுத்ரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது எம்.எம்.கீர வாணி நெகிழ்ச்சியுடன் பேசும் போது, ‘என் தந்தை சென்னை யில் பணியாற்றியபோது என் தாயின் கருவில் உருவான வன் நான். பணி மாற்றத்தால் தந்தை ஐதராபாத் சென்றபோது அங்கு பிறந்தேன். அந்தவகையில்தான் எனது தெலுங்கு உடலில் தமிழ் ஆன்மா என்பேன். 22 வருடங்களாக சென்னையில் இருந்தேன். தெலுங்கில் அதிக படங்களுக்கு இசை அமைத்ததால் ஐதராபாத் சென்றேன். எனக்குப் பிடித்த தமிழ்க் கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, வைரமுத்து. அவர்கள் எழுதிய பாடல்களைக் கேட்கும்போது அதிக எனர்ஜி கிடைக்கின்றது. ‘வானமே எல்லை’ படத்தின் பாடலைக் கேட்டாலும் மன அழுத்தம் மறைந்துவிடுகிறது’ என்றார்.