சென்னை: கடந்த 1980களில் இருந்து இன்றுவரை ஒரு மிகப்பெரிய கொள்ளைக்கூட்டம் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா ஆகிய தென்மாநிலங் களில் கொலை மற்றும் கொள்ளை போன்ற குற்றச்செயல்களை தொடர்ச்சியாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இதில் ஒரு பிரிவினரை காவல்துறையினர் கைது செய்தார்கள். 390 திருட்டு வழக்குகள், 108 கொலைக்குற்ற வழக்குகள், கொடுமையான 90 பாலியல் பலாத்கார வழக்குகள் என்று, ஒரே கும்பலுக்கு 6 முறை மரண தண்டனை வழக்குகள் நடந்து வருகிறது.
இதுவரை யாருக்கும் தூக்கு தண்டனை வழங்க முடியவில்லை. குற்ற வாளிகளை கைது செய்திருந்த காவல்துறை அதிகாரிகள் மிக மோசமான நிலைக்கு ஆளாகியுள்ளனர். கைதானவர்கள் எல்லா வழக்கிலும் விடுதலையாகி வருகின்றனர். இன்னும் 10 வழக்குகள் மட்டும்தான் நிலுவையில் இருக்கிறது. இவர்கள் அனைவரும் எழுதப் படிக்கவே தெரியாத தினசரிக்கூலிகள். இதுபோன்ற உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம், ‘தண்டுபாளையம்’. இப்படத்தை டைகர் வெங்கட், கே.டிநாயக் இணைந்து இயக்கியுள்ளனர்.
வெங்கட் மூவிஸ் சார்பில் தயாரித்து, காவல்துறை ஏ.சி.பி வேடத்தில் டைகர் வெங்கட் நடித்துள்ளார். சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார், முமைத்கான், சூப்பர் குட் சுப்பிரமணியம், பிர்லா போஸ், ஆலியா, நிஷா ரஃபிக் கோஷ், ரவிசங்கர், மகரந்த் தேஷ்பாண்டே, ரவிகாளே, ராயல் பிரபாகர் நடித்துள்ளனர். இளங்கோவன் ஒளிப்பதிவு செய்ய, ஜித்தின் ரோஷன் இசை அமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி டைகர் வெங்கட் இயக்கியுள்ளார். சித்தூர், பெங்களூரு, கேஜிஎஃப், திருச்சி, கடப்பா, நகரி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.