சென்னை: கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாகி வெற்றி பெற்ற ‘தனி ஒருவன்’ திரைப்படத்தின் எட்டாவது ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. அதன்படி தனி ஒருவன் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஜெயம்’, ‘எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி’, ‘உனக்கும் எனக்கும்’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘தில்லாலங்கடி’, ‘தனி ஒருவன்’, என ஆறு படங்களில் பணியாற்றிய இயக்குநர் மோகன் ராஜாவும், அவரது தம்பி ஜெயம் ரவியும் ஏழாவது முறையாக ‘தனி ஒருவன் 2’ படத்திற்காக இணைகின்றனர்.
முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த நயன்தாரா, 2வது பாகத்திலும் நடிக்கிறார். முதல் பாகத்தை தயாரித்த ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட், ‘தனி ஒருவன் 2’ படத்தையும் தயாரிக்கிறது.
இதில் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்ற உள்ளார்கள். நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என தெரிவித்துள்ளது.