மும்பை: அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக கூறி பத்திரிகையாளர் ஒருவருக்கு எதிராக நடிகை ஊர்வசி ரவுடேலா வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா குறித்து குவைத்தை சேர்ந்த பத்திரிகையாளரும், தொழில் முனைவோருமான உமைர் சந்து என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில், ஐரோப்பாவில் நடந்த சினிமா ஷூட்டிங்கின்போது பிரபல நடிகரின் மகன் ஒருவர், ஊர்வசி ரவுடேலாவிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும், இந்த தகவலை ஊர்வசி ரவுடேலாவே தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறியிருந்தார்.
இவரது இந்த பதிவால், ஐரோப்பாவில் நடந்த சினிமா ஷூட்டிங் குறித்தும், பிரபல நடிகரின் மகன் யார் என்பது குறித்தும் பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதனால் கடுப்பான ஊர்வசி ரவுடேலா, தன்னைப் பற்றி தவறான தகவலை பரப்பியதாக கூறி உமைர் சந்துவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், ‘உமைர் சந்து என்னுடைய அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அல்ல. அவர் எனக்கு எதிராக கூறியுள்ள அவதூறு கருத்துகளால் எனது குடும்பத்தினருக்கு பெரும் சங்கடம் ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். இதன் விவரங்களை தனது டிவிட்டர் பக்கத்திலும் ஊர்வசி ரவுடேலா பகிர்ந்துள்ளார். இவ்விவகாரத்தில் உமைர் சந்து தரப்பில் இதுவரை பதிலளிக்கவில்லை.