சென்னை: சூரி நடித்த ‘கொட்டுக்காளி’ என்ற படம் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதில் தனக்கு வித்தியாசமான குரல் பயன்படுத்தப்பட்டதாகவும், அந்தக் குரலுக்கு தான் என்ன செய்தேன் என்பதை அறிந்து, வெளிநாட்டில் இப்படத்தைப் பார்க்க வந்தவர்கள் ஆச்சரியம் அடைந்ததாகவும் சூரி குறிப்பிட்டுள்ளார்.
கரகரப்பான குரல் வேண்டும் என்பதற்காக மருத்துவரை அணுகியதாகவும், ‘ஒரு டாக்டராக நீங்கள் சொல்வதை என்னால் செய்ய முடியாது’ என்று டாக்டர் மறுத்ததாகவும், ‘மிகப்பெரிய பாதிப்பு ஏற்படாதபடி, இந்தப் படத்துக்காக நான் வித்தியாசமாகச் செய்வதற்கு நீங்கள் உதவ வேண்டும்’ என்று தான் சொன்னதாகவும் சூரி தெரிவித்துள்ளார். உடனே டாக்டர் தனக்கு சில அறிவுரைகள் கூறியதாகவும், அதன்படி தொண்டையைக் கவ்வும் வகையில் சில நாட்டு மருந்துகளை எடுத்துக்கொண்டு தான் டப்பிங் பேசியதாகவும் சூரி கூறியிருக்கிறார்.