சுனைனா நடித்து தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘ரெஜினா’. இதில் சுனைனா முதன் முறையாக சோலோ ஹீரோயினாக நடித்திருக்கிறார். தன் வாழ்க்கையை நாசமாக்கியவர்களை தனியொருத்தியாக தேடிச் சென்று பழிவாங்கும் கதை. டொமின் டி சில்வா இயக்கி உள்ளார். தனக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி உள்ள இந்த படத்தின் புரமோஷனுக்காக கடந்த 2 மாதமாக தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். படம் வெளியாகி விட்டதால் தற்போது தியேட்டர் தியேட்டராக சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார்.
மதுரையில் உள்ள தியேட்டர் ஒன்றில் ரசிகர்களை சந்தித்த அவர் இதுகுறித்து கூறும்போது, ‘எனது முந்தைய படங்களுக்கும் தற்பொழுது வெளியாகி உள்ள இந்த ரெஜினா படத்திற்கும் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் இருக்கிறது. என்னை நம்பி தயாரிப்பாளர் பெரிய முதலீடு செய்திருக்கிறார். அவருக்காக நான் தரும் மதிப்புதான் இந்த பயணம். தற்பொழுது தமிழ் சினிமா துறையில் கதாநாயகிகள் சார்ந்த கதைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவது ஆரோக்கியமான ஒரு விஷயமாக இருக்கிறது. சினிமாவில் தற்போது கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கமர்சியல் சினிமா வந்து கொண்டு இருக்கிறது. இது நல்ல விஷயம். கலை எந்த வடிவத்தில் இருந்தாலும் அது நன்றாக இருந்தால் மக்கள் அதனை வரவேற்பார்கள்’ என்றார்.