திருவனந்தபுரம்: மலையாள நடிகை நவ்யா நாயர் பல்வேறு மொழிகளில் நிறைய படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு குழந்தை பெற்ற அவர், சில ஆண்டுகள் திரையுலகை விட்டு ஒதுங்கினார். நடன நிகழ்ச்சி நடத்திய அவர், மீண்டும் மலையாளத்தில் நடித்து வருகிறார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு: திரையுலகில் எனது மறுபிரவேசம் நன்றாக இருக்கிறது. நான் எதிர்பார்த்ததை விட ரசிகர்கள் எனக்கு அதிகமான வரவேற்பு அளித்துள்ளனர். தற்பாது நிறைய கதைகள் கேட்டு வருகிறேன். அனைத்து இயக்கு னர்களும் புதுமையான கோணத்தில் கதை சொல்லி அசத்துகின்றனர்.
அதில் எதை விடுவது, எதை தேர்வு செய்வது என்று தெரியவில்லை. நான் நடித்தபோது பார்த்த திரையுலகிற்கும், இப்போது பார்க்கும் திரையுலகிற்கும் நிறைய வித்தியாசங்கள் தெரிகிறது. சில வருடங்களாக ஒட்டுமொத்த திரைத்துறையிலும் பல அதிசயத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இப்போது நான் நடித்த படங்களின் ஷூட்டிங்கில் பல பெண்கள் பணியாற்றியதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களுக்கும் கேரவன் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் ஹீரோ, ஹீரோயினுக்கு மட்டுமே கேரவன் கொடுத்தனர். இப்போது அனைவருக்கும் வசதிகள் செய்து கொடுக்கின்றனர்.
கதை, காட்சி அமைப்பு, படத்தின் உருவாக்கம், அதை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி என்று, அனைத்து மாற்றங்களும் பிரமிக்கத்தக்கதாகவே இருக்கிறது. ஆனால், செல்பி தொந்தரவு எல்லை மீறுவதாக இருக்கிறது. உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் நேரத்திலும் செல்பி எடுக்க முயற்சிக்கின்றனர். ஒருவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்றிருந்தபோதும், செல்பி எடுக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். இதுபோன்ற செயல்கள் அதிக வருத்தத்தை அளிக்கிறது. மற்றவர்கள் நிலமையை ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தை மதிக்க வேண்டும்.