கதையின் நாயகன் ஹரனும் (சிபி), அவரது காதலி ஜனனியும் (பவ்யா ட்ரிகா) காரில் ரொமான்ஸ் செய்தபடி பயணிக்கும்போது, எதிர்பாராவிதமாக ஒருவர் மீது கார் மோதியதில், அந்த நபர் ஸ்பாட்டிலேயே இறந்துவிடுகிறார். இந்த விபத்தை மறைத்து, அவர்கள் இருவரும் போலீசிடம் இருந்து தப்பிக்கின்றனர். எனினும், ஹரனின் மனசாட்சி அவரை உறுத்துகிறது. விபத்தில் உயிரிழந்தவரின் ஒரே மகன் மனநலம் பாதிக்கப்படுகிறான். அவனை பாலியல் தொழிலாளி அஞ்சலி (யாஸ்மின் பொன்னப்பா) கவனித்துக்கொள்கிறார்.
சிறுவனும், ஹரனும் எதிர்பாராவிதமாக ஒரு புள்ளியில் சந்திக்கின்றனர். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. பாலியல் தொழிலாளி தனது கஸ்டமரின் மகன் மீது காட்டும் அக்கறை, மின்னல். ஹரனுக்கும், ஜனனிக்கும் இடையே இருப்பது, காதல். இரண்டு கதைகளும் யதார்த்தமாக சொல்லப்பட்டுள்ளன. முழு கதைக்கும் வில்லனாக வின்சென்ட் நகுல் உள்ளே வருகிறார். அவர், இடி. லாஜிக்குகளை மீறிய வில்லன் மற்ற இரு கதைகளையும் கலைத்துவிடுவது மைனஸ் எனினும், நிறைவான சஸ்பென்ஸ் திரில்லர் படத்தைக் கொடுத்துள்ளார்,
பாலாஜி மாதவன். அவருக்கு இசை அமைப்பாளர் சாம் சி.எஸ், ஒளிப்பதிவாளர் ஜெயச்சந்தர் பின்னம்னேனி உதவி செய்துள்ளனர். சிபி தனக்குக் கிடைத்த வாய்ப்பில் ஸ்கோர் செய்துள்ளார். முழு கதையையும் பாலியல் தொழிலாளி யாஸ்மின் பொன்னப்பாவும், சிறுவனும் ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். அவர்களுக்கான காட்சிகள் யதார்த்தமாக இருக்கின்றன. பவ்யா ட்ரிகாவுக்கு காதலிப்பதை தவிர வேறு வேலை இல்லை. பாதிரியார் ராதாரவி, ஹெட் கான்ஸ்டபிள் பாலாஜி சக்திவேல், கார் மெக்கானிக் ஜெகன் ஆகியோரின் கேரக்டர்கள் அழுத்தமாக இருக்கின்றன.
‘ஆரண்ய காண்டம்’ யாஸ்மின் பொன்னப்பா சிறப்பாக நடித்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய ஹீரோவும், விபத்தில் பலியான நபரின் மகனும் இணைவது தற்செயலான சினிமாத்தனம். தந்தை மீது பாசம் கொண்ட சிறுவன், சைக்கோத்தனமாக நடந்துகொள்வது ஒருகட்டத்துக்கு மேல் சலிப்பு ஏற்படுத்துகிறது. அவன் சொன்னான் என்பதற்காக, மனோதத்துவம் படித்த ஹீரோ விஷம் குடிப்பது நம்பும்படி இல்லை. மெக்கானிக் ஷெட்டுக்கு கீழே ஜெகன் எதற்காக ரகசிய அறை வைத்திருக்கிறார் என்பதற்கு விளக்கம் இல்லை. இடி கெடுக்காமல் இருந்திருந்தால் மின்னலையும், காதலையும் கூடுதலாக ரசித்திருக்கலாம்.