சென்னை: என் அன்பு சகோதர, சகோதரிகளே. சிறிது காலம் நான் ஓய்வெடுக்க உள்ளேன்’ என்று நேற்று திடீரென்று சிவகார்த்திகேயன் அறிவித்திருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியிலும், பெரும் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது.மிமிக்ரி கலைஞராகவும், டி.வி நிகழ்ச்சியில் விஜேவாகவும் இருந்த சிவகார்த்திகேயன், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிம்பு, ஜெய் நடித்து கைவிடப்பட்ட ‘வேட்டை மன்னன்’ படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். பிறகு டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரம் இயக்கத்தில் அஜித் குமார், நயன்தாரா நடித்த ‘ஏகன்’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். இதையடுத்து பாண்டிராஜ் இயக்கிய ‘மெரினா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி இளம் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வரும் சிவகார்த்திகேயன், படம் தயாரிப்பது மட்டுமின்றி, பாடல் எழுதுவது, பாடுவது போன்ற பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். தற்போது அவரது நடிப்பில் ஆர்.ரவிக்குமார் இயக்கியுள்ள ‘அயலான்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது. வரும் தீபாவளிக்கு இப்படம் திரைக்கு வருகிறது. ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
அடுத்து ‘மண்டேலா’ படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற மடோன் அஷ்வின் இயக்கியுள்ள ‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 11ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தில் அதிதி ஷங்கர், மிஷ்கின், யோகி பாபு, சரிதா நடித்துள்ளனர். இவ்விரு படங்களை தவிர, கமல்ஹாசன் தயாரிப்பில் ‘ரங்கூன்’ ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடக்கிறது.இந்நிலையில், நேற்று சிவகார்த்திகேயன் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘என் அன்பு சகோதர, சகோதரிகளே. டிவிட்டரில் இருந்து சிறிது காலம் நான் ஓய்வெடுக்க உள்ளேன். விரைவில் நான் திரும்பி வருவேன். பத்திரமாக இருங்கள். என் படம் குறித்த அப்டேட்டுகளை எனது குழுவினர் இங்கு பதிவிடுவார்கள்’ என்று தெரிவித்துள்ளார். திடீரென்று சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் இருந்து விலகியதை அறிந்த அவரது ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.