மும்பை: மும்பையின் ஜூஹூ பகுதியில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா ரூ.190 கோடியில் ஆடம்பர பங்களா வாங்கி குடிபோயிருக்கிறார். பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா, தமிழில் லெஜன்ட் படத்தில் நடித்தார். கடந்த எட்டு மாதங்களாக மும்பையின் ஜூஹூ பகுதியில் தனது கனவு பங்களாவை தேடிக் கொண்டிருந்தார். காரணம் இப்பகுதியில் தான் அமிதாப் பச்சன், அஜய் தேவ்கன், ஜான் ஆபிரகாம், ஹிரித்திக் ரோஷன், அக்ஷய் குமார், அனில் கபூர் உள்ளிட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஜூஹூ பகுதியில் வாங்கிய பங்களாவில் ஊர்வசி ரவுடேலா குடியேறினார்.
இருப்பினும், அவர் வாங்கிய சொத்தின் விலை உள்ளிட்ட விவரங்கள் தெரியாமல் இருந்தது. புதிய பங்களாவின் பெயர் கூட மறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரபல வர்த்தக நாளிதழ் வெளியிட்ட செய்தியில், ‘ஊர்வசி ரவுடேலா வாங்கியுள்ள ஆடம்பர பங்களாவின் விலை ரூ.190 கோடி. நான்கு மாடி கொண்ட இந்த பங்களாவில் ஆடம்பரமான தோட்டம், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மறைந்த திரைப்பட தயாரிப்பாளர் யாஷ் சோப்ராவின் வீட்டிற்கு பக்கத்தில் தான் ஊர்வசி ரவுடேலாவின் பங்களாவும் உள்ளது’ என்று தெரிவித்துள்ளது.