சென்னை: சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் குடூர் நாராயண ரெட்டி தயாரிப்பில் உருவாகியுள்ள படம், ‘ரஸாக்கர்’. யதா சத்யநாராயணா இயக்கியுள்ளார். பாபி சிம்ஹா, வேதிகா நடித்துள்ள இப்படம், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஐதராபாத் நிஜாமின் ஆட்சியை எதிர்த்து நடந்த கிளர்ச்சியை மையமாக கொண்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகும் இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொண்ட வேதிகா பேசியது:
இப்படத்துக்காக என்னை அழைத்தபோது, எனக்கு உண்மையான வரலாறு தெரியாது. இந்தியாவுக்கு 1947ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது என்பதை படித்திருக்கிறேன். ஆனால், ஐதராபாத்துக்கு 1948ல்தான் சுதந்திரம் கிடைத்துள்ளது என்ற வரலாற்று உண்மை எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. அந்த வரலாற்றின் உண்மையைச் சொல்லும் படத்தில் நானும் இருப்பது பெருமை.
மறைக்கப்பட்ட வரலாற்றை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அப்போதுதான் அதிலிருந்து நாம் நல்ல பாடத்தை கற்றுக்கொள்ள முடியும். தமிழில் எனக்கு சின்ன இடைவெளி ஏற்பட்டு இருந்தாலும், தமிழ் ரசிகர்கள் எப்போதுமே என் அன்புக்குரியவர்கள்தான். அவர்கள் என்னை எப்போதும் மறக்காமல் இருக்கிறார்கள். எனக்கு தொடர்ந்து துணை நிற்கிறார்கள். இனி தொடர்ந்து நான் தமிழில் நிறைய படங்களில் நடிப்பேன்.