‘விடியும் முன்’ பாலாஜி கே.குமார் இயக்கியுள்ள ‘கொலை’ என்ற படம், நாளை திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா, ஜான் விஜய் நடித்துள்ளனர். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்ய, கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைத்துள்ளார். படம் குறித்து விஜய் ஆண்டனி கூறுகையில், ‘பல வருடங்களுக்குப் பிறகு பாலாஜி குமார் தமிழில் படம் இயக்கியுள்ளது குறித்து சந்தோஷப்படுகிறேன். நாங்கள் எதிர்பார்த்ததை விட படம் சிறப்பாக வந்திருக்கிறது. கதை சொல்லும்போது, படத்தில் மூன்று கதாநாயகிகள் என்று சொன்னார். பிறகு இரண்டு ஆனது. அதிலும் மீனாட்சி சவுத்ரி இன்னொருவருக்கு ஜோடி. ரித்திகா சிங் எனக்கு தங்கை மாதிரி.
எனக்கு ஒரு மனைவி என்று சொன்னார். அந்தக் கதாபாத்திரம் எப்போதுமே என்மீது கோபத்தில் எரிந்து விழும். இப்படி ஒவ்வொரு படத்திலும் என்னை ரொமான்ஸ் செய்யவிடாமல் தடுக்கின்றனர். எனக்கு நீதி வேண்டும். ஆனால், ‘கொலை’ படம் ஒரு ஜாலியான அனுபவமாக இருந்தது. இசை, எடிட்டிங், ஒளிப்பதிவு உள்பட அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது. மீனாட்சி சவுத்ரி அடிப்படையில் மருத்துவர். இப்போது ஐஏஎஸ் படித்து வருகிறார். அடுத்து தெலுங்கில் மகேஷ் பாபுவின் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்’ என்றார்.