விஜய் சேதுபதி நடித்துள்ள 50வது படம், ‘மகாராஜா’. பேஷன் ஸ்டுடியோஸ் சுதன், தி ரூட் ஜெகதீஷ் பழனிச்சாமி தயாரித்துள்ளனர். ‘குரங்கு பொம்மை’ நித்திலன் இயக்கியுள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, ‘காந்தாரா’ அஜ்னீஷ் லோக்நாத் இசை அமைத்துள்ளார். படம் குறித்து மம்தா மோகன்தாஸ் கூறுகையில், ‘தமிழில் நான் குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் மட்டுமே நடித்துள்ளேன். இப்போது ‘மகாராஜா’ என்ற ஸ்பெஷலான படத்தில் நடித்திருப்பது குறித்து அதிக மகிழ்ச்சி. கதை நன்றாக இருந்தால் உடனே அந்தப் படத்தைப் பார்த்துவிடுவது என் வழக்கம்.
விஜய் சேதுபதி நடித்த பல படங்களைப் பார்த்து ரசித்துள்ளேன். அபிராமி சொன்னது போல், விஜய் சேதுபதியின் கண்களில் ஒரு மேஜிக் இருக்கிறது. வித்தியாசமான பழிவாங்கும் கதை கொண்ட ‘மகாராஜா’ படத்தில் அனுராக் காஷ்யப், விஜய் சேதுபதிக்கு இடையே நடக்கும் போராட்டம், நிச்சயமாக ரசிகர்களுக்கு மாறுபட்ட அனுபவமாக இருக்கும்’ என்றார். அபிராமி கூறும்போது, ‘தமிழ் சினிமாவில் மிகவும் தீவிரமான கண்கள் என்றால், கமல்ஹாசன் கண்களைப் பற்றி சொல்வேன். அதற்குப் பிறகு விஜய் சேதுபதியின் கண்கள் என்னைப் பெரிதும் ஈர்த்தது. இப்படத்தின் கதை எனக்கு தெரியாது. எனது காட்சிகளைப் பற்றி மட்டுமே தெரியும்’ என்றார்.