சென்னை: பட்டிமன்ற பேச்சாளரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவகுமார் கதை நாயகனாக அறிமுகமாகும் படம் ‘அழகிய கண்ணே’. இதனை இயக்குனர் சீனு ராமசாமியின் தம்பி ஆர்.விஜயகுமார் இயக்குகிறார். சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார், ஏ.ஆர்.அசோக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இதுகுறித்து லியோ சிவகுமார் கூறியதாவது: எனது அப்பாவின் நெருங்கிய நண்பர் விஜய்சேதுபதி. அவரின் பேச்சுக்கு விஜய்சேதுபதி ரசிகர், விஜய்சேதுபதியின் நடிப்புக்கு அப்பா ரசிகர்.
என் மகன் நடிக்கும் படத்தில் நீங்கள் ஒரு காட்சியில் நடித்து கொடுக்க வேண்டும் என்ற அப்பாவின் கோரிக்கையை ஏற்று சிறப்பு தோற்றத்தில் நடித்துக் கொடுத்தார். படத்தில் அவர் நடிகர் விஜய்சேதுபதியாகவே நடித்திருக்கிறார். துணை இயக்குனராக நடிக்கும் நான் அவரிடம் சென்று கதை கூறி ஒப்புதல் வாங்கும் காட்சியில் நடித்தார். அவரது அலுவலகத்திலேயே படப்பிடிப்பு நடந்தது. இதற்காக சம்பளம் எதுவும் அவர் பெற்றுக் கொள்ளவில்லை. மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து சினிமாவில் ஜெயிக்கப்போராடும் ஒரு இளைஞனின் கதை. அவனின் காதல் மனைவியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். படம் வருகிற 23ம் தேதி வெளிவருகிறது என்றார்.