சென்னை: 7சிஸ் என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் தயாரிப்பில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. ஆக்சன், காமெடி கமர்சியல் படமாக உருவாக்கப்பட்டு வரும் விஜய் சேதுபதி 51 படத்தின் படப்பிடிப்பு, மலேசியாவில் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் முழுக்கதையும் மலேசியாவில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் பி.ஆறுமுக குமார் கமர்சியல் படமாக இப்படத்தை இயக்கி வருகிறார்.
இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்திற்காக இதுவரை மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தப்படாத பல முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. சைனீஸ் சண்டை கலைஞர்களுடன், விஜய் சேதுபதி கலந்துகொள்ள, சண்டைக்காட்சியும் சேஸிங் காட்சியும் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் கன்னட நடிகை ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். படம் முழுவதும் பயணிக்கக்கூடிய முக்கிய பாத்திரத்தில் யோகிபாபு நடித்துள்ளார். இவர்களுடன் பி. எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.